நம் கல்விமுறை - அன்றும், இன்றும்!!!


நம்முடைய கல்விமுறைன்னு அதாவது இந்திய கல்விமுறைனா அது குருகுல கல்விதான். இதை நான் எதும் புதுசா கண்டுபிடிச்சு எல்லாம் சொல்லல. இது எல்லாருக்கும் தெரிஞ்ச ஒரு விஷயம் தான். ஆனால் அங்க என்ன எல்லாம் சொல்லிதந்தாங்ககுறது நம்ம எல்லாருக்கும் தெரியுமான்னு கேட்டா அது ஒரு கேள்விக்குறி??? இதை பத்தி நான் ஏன் பேசுறேங்குறது கீழ படிக்குறப்ப புரியும்.

சரி. குருகுல கல்வில என்ன எல்லாம் சொல்லி தந்தாங்க பாப்போம்?
  • ஒழுக்கம்காலையில சீக்கிரம் எழுந்திருக்கிறதுல இருந்து தன் வேலைய தானே பார்துக்குறது, குருவின் வீட்டு வேலைகள், விவசாயம் வரைக்கும்.
  •  அறம்எது சரி? எது தவறு? வாழ்வுமுறை, சமூக அக்கறை, தனிமனித ஒழுக்கம், எல்லாம்.
  • யோகாதியானம் மனதிற்கு, உடற்பயிற்சி உடம்பிற்கு.
  • வேதங்கள், புராணங்கள், மந்திரங்கள் - இது நம்ம முன்னோர்களுடைய வாழ்வியல் முறை, அவங்க கடைபிடிச்ச தர்மம், நாம அதுல இருந்து கதுக்கவேண்டிய பாடங்கள் மற்றும் நீதி போதனைகள். அப்புறம் நம் அன்றாட வாழ்க்கையில் ஜபிக்க வேண்டிய சில மந்திரங்கள்.
  • போர்முறைசிலருக்கு மட்டும்தான் இது. அதாவது ராஜ குடும்பங்களுக்கும், போர் தொழில்ல ஈடுபட போறவங்களுக்கு மட்டும்.
  • எழுத, படிக்க.
இது படிச்ச உடனே உங்களுக்கு எல்லாம் ஒரு கேள்வி வந்துருக்குமே? அது என் காதுலையே விழுது. இதை எல்லாம் வெச்சு என்ன பண்ண முடியும்? சம்பாதிக்க முடியாதேL. ஆனால், நம்ம வாழ்க்கையை சிறப்பா, அழகானதா, தைரியமா, எதிர்கொள்ள முடியும். உங்கள சொல்லி தப்பில்ல. நம்ம சமூகம் உங்களை அவ்வளவு கெடுத்து வெச்சுருக்கு. கல்வி சொல்லி தர்ற இடம் வாழ கத்துக்குற இடம். ஆனால், நாம வெறுமனே சம்பாதிக்க கத்துக்குற இடமா மாத்திட்டோம். இதுதான் நம்மோட பெரிய பிரச்சனை.

ஆக அப்போ அந்தக்கலதுல எப்படி சம்பாதிக்க கத்துகிட்டாங்க? சம்பாதிக்க அப்பா/அண்ணன்/குடும்பம் சொல்லி கொடுக்கும். விவசாயி விவசாயம் சொல்லி கொடுப்பார், தச்சன் தச்சு வேலை சொல்லி கொடுப்பார், வியாபாரி வியாபாரம் சொல்லி கொடுப்பார். முக்கியமா அந்த தொழில்ல கடைபிடிக்க வேண்டிய அறத்தையும் சேர்த்து சொல்லி கொடுப்பாங்க. இதுனாலத்தான் இன்னைக்கும் யாரவது ஒழுக்கக்கேடா நடந்துகிட்டா, படிச்ச பையனா நீன்னு கேள்வி கேட்கிறோம்? இப்படி படிப்பையும், பிழைப்பையும் பிரிச்சு வெச்சுருந்த ஒரு சமூக கட்டமைப்பு இருந்தது. இதை விட ஒரு அழகான ஏற்பாடு வேறெந்த நாட்டுலயும் கிடையாது.

சரி. இதை நாம எப்போ முழுசா உடைச்சோம்? பாதி மொகலாய காலத்துலயும் மீதிய ஆங்கிலேயர் காலத்துல எடுத்துட்டு வந்த மெக்காலே கல்விதிட்டதாலயும். அடுத்த கேள்வி, சரி அப்போ நாம அந்தகாலதுக்கே போக சொல்றீங்களான்னு கேட்பீங்க? இல்லை! நிச்சயமா இல்லை. ஆனால், அதுல இருந்த சில நல்ல விஷயங்கள எடுத்துக்கணும்னு தான் சொல்றேன். ஆங்கிலம், தமிழ், வேதியல் மாதிரி நம்ம புராணங்கள், சமூக அக்கறை, வாழ்க்கைக் கல்வி, தனி மனித ஒழுக்கம், எல்லாம் சொல்லிக்கொடுத்து நம்ம ஆளுமையை வளர்க்குற ஒரு இடமா நம்ம பள்ளிகூடங்கள மாத்தணும்.

அது மட்டுமில்லை. நம்ம பாடங்களையும், அதை சொல்லி தர்ற முறையையும், தேர்வு முறைகளையும் முழுசா மாற்ற வேண்டிய சூழ்நிலையில நாம இருக்கோம். உதாரணத்துக்கு, நாம உடனடியா மாத்த வேண்டிய ஒன்னு, நாம சரித்திரத்தை படிக்குற விதமும் பாடங்களும் , சொல்லிக் கொடுக்குற முறையையும்.

கஜினி முகமது 17 முறை நம்ம நாட்டுமேல படை எடுத்து தோத்தார்னு சொல்லித்தர்றது ரொம்ப தவறு. 17 முறை அவர் வந்து கொள்ளை அடிச்சுட்டு போனார்ங்குறது தான் உண்மை.

எப்படி ஒரு சரித்திர உண்மைய இருட்டடிப்பு செய்யக்கூடாதோ, அதேமாதிரி நாம சொல்லிகுடுக்குற சம்பவங்களோட காரண காரியங்களையும் சொல்லித்தரனும். நான் படிச்சப்ப சோழர் காலத்துல குடவோலை முறையை ராஜ ராஜ சோழன் உத்திரமேரூர்ல அறிமுகபடுதினார்னு மட்டும் தான் இருந்தது. இது எவ்வளவு பெரிய தவறு? யார் படிச்சாலும் என்ன நினைப்போம்? ஊர் தலைவர்களை வெறும் குலுக்கல் முறையில தேர்ந்தெடுக்கிறதான்னுதான்? ஆனால், ஒருத்தரோட பெயர் அந்த குடத்துக்குள்ள போறதுக்கு நிறைய தகுதிகள் வேணும். அதாவது, உதாரணத்துக்கு, ஒருத்தர் பெயர் அந்த குடத்துக்குள்ள போகனும்னா, அவருக்கு எந்தவித குற்றப்பின்னனி இருக்ககூடாது. இந்த மாதிரி பல தகுதிகளின் அடிப்படையில்தான் ஒருத்தரோட பெயர் அந்த குடத்துல போட முடியும். இதை சொல்லி தராம குடவோலை திட்டத்தை பத்தி பொத்தாம் பொதுவா சொல்லி தர்றது எப்படி சரியா இருக்க முடியும்? "யாதும் ஊரே யாவரும் கேளிர்", இப்பவும் வெறும் மணப்பாட செய்யுளா மட்டுமே இருக்கு. அது எவ்வளவு உள்ளார்ந்த அர்த்தத்தோடு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னாடி நம் தமிழ் முன்னோர்கள் சொல்லி இருக்காங்கனு நாம சொல்லி கொடுக்குறது இல்லை. இப்போ நாம பேசிட்டு இருக்குற "குளோபலைசேஷன்" கூட அதன் அர்த்தம்தான்.

இரண்டாவது, சரித்திரப் புத்தகம் ஒரு அழகான புதினம் மாதிரி இருக்கணும். அப்போதான் சரித்திரம் சுவையாகவும் இருக்கும், மாணவர்கள் விருப்பப்பட்டு படிப்பாங்க.

மூன்றாவது, சரித்திர தேர்வு கேள்வி முறை  முற்றிலும் மாற்றப்படணும். மிகவும் முக்கியமான வருடங்கள், தேதிகள் தவிர, மற்றவை எல்லாம் மிகவும் சம்பவங்களின் அடிப்படை மற்றும் அவை நமக்கு கற்று தரும் பாடம் என்ன என்கிற விளக்கமுறை கேள்விகளாவே இருக்கனும். மற்றும் அந்த சம்பவங்கள் நமக்கு சொல்லிக்கொடுக்குற பாடத்தின் அடிப்படையில் அமையனும். இது ஒரு பாடத்துக்கு நான் எடுத்துகிட்ட ஒரு உதாரணம்தான். இந்த மாதிரி பல மாற்றங்களை எல்லா பாடத்துலயும் எடுத்துட்டு வரணும்.

நான்காவது, நம்ம தமிழ் மற்றும் சரித்திர ஆசிரியர்கள் பாடம் சொல்லி கொடுக்குற முறையை இன்னும் சுவாரஸ்யமாவும், கதை சொல்கிற பாணியிலயும், பெருமை மற்றும் விஞ்ஞானம் கலந்தும் சொல்லி தரணும்.

இது இல்லாம, நிறைய நாம சேர்க்க வேண்டிய பாடங்களும் நிறைய, மாற்ற வேண்டிய முறைகளும் நிறைய. நம்ம கலாச்சாரம், சம்பிரதாய முறைகள் மற்றும் அவற்றின் விஞ்ஞான பின்னணி, நீதிக் கதைகள், சமூக பார்வை இவை எல்லாவற்றையும் சொல்லி கொடுத்தாதான் நம்ம நாட்டின் மேலயும், கலாச்சாரத்தின் பெயர்லயும் ஒரு மரியாதை, மதிப்பு மற்றும் பெருமை பிள்ளைகளின் மனசில வளரும்

நாம் இன்னொரு முக்கியமான விஷயத்தை மறந்துடுறோம். இது தகவல் யுகம். எல்லாவற்றுக்கும் காரண காரியங்களை சொல்லித் தர வேண்டிய கட்டத்துலயும், கட்டாயத்துலயும் இருக்கோம். முன்னாடி சொன்னாங்க நாம அதை ஏத்துக்கிட்டு போகணும்னு இந்த தலைமுறைக்கிட்ட சொன்னா அவங்க ஏத்துக்கமாட்டாங்க. மாற வேண்டியது அவங்க இல்லை. கல்விக்கூடங்கள், பெற்றோர்கள். ஒரு நல்ல தலைமுறையையும், சமுதாயத்தையும் உருவாக்குற இடமா மாத்தனும். ஆனால், வருத்தமான உண்மை, இன்றைய கல்வி கூடங்கள், பணம் சம்பாதிக்கும் இயந்திரங்களை மட்டுமே உருவாக்குகின்றன. அதை மட்டுமே நம் பெற்றோர்களும் கேட்குறாங்க. மேல சொன்ன மாற்றம் நம் அரசு மட்டுமல்ல இன்றைய பெற்றோர்கள், மாணவர்கள், பள்ளிகளும் முன்னெடுக்கணும். என்ன? நான் சொல்றது சரிதானே?

இன்னும் பேசுவோம்!!!

Comments

Post a Comment

Popular posts from this blog

Workaround Solutions

சடங்குகளும் சம்பிரதாயங்களும்....